நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் பொதுமக்களின் கருத்தரிப்பு விகிதம் மிக விரைவாகக் குறைந்து வருவது நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கும் தொழிலாளர் பற்றாக்குறைக்கும் சவாலாக மாறியுள்ளதாக தேசிய மக்கள் தொகை, குடும்ப மேம்பாட்டு வாரியம் (LPPKN) தலைமை இயக்குனர் டத்தோ அப்துல் சுகூர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
கிளந்தான் மாநிலத்தில் நடைபெற்ற உலக மக்கள் தொகை தின விழாவில் பேசிய அவர், தேசிய அளவில் மொத்த கருத்தரிப்பு விகிதம் (TFR) ஒரு பெண்ணுக்கு 1.6 என்ற நிலைக்குக் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தாமதமாக திருமணம் செய்து கொள்வது, நிதிச் சிக்கல்கள், வாழ்க்கைச் செலவின உயர்வு, விவாகரத்து குறித்த அச்சம் போன்றவை கருத்தரிப்பு விகிதம் குறைவதற்கான முக்கிய காரணங்களாகும் என்று சுட்டிக்காட்டிய அவர், தற்காலத்தில் பெண்களின் சராசரி திருமண வயது 27 ஆகவும், ஆண்களின் வயது 30 ஆகவும் உயர்ந்துள்ளதுடன், பல இளைஞர்கள் குடும்பப் பொறுப்புகளை ஏற்கத் தயங்கித் தனித்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார்.