உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும், தங்களின் நடவடிக்கைகளைத் தடையின்றி மேற்கொள்ளவும் முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று இரவு மலாயா பல்கலைக்கழகத்தின் டேவான் துங்கு சன்சலெரில் நடைபெற்ற மலேசியா மடானி அறிஞர்கள் மன்றத்தில் உரையாற்றிய அவர், பல்கலைக்கழகங்கள் விமர்சன ரீதியான சிந்தனைக்கும் புதிய கண்ணோட்டங்களுக்கும் முக்கிய தளங்களாகத் திகழ வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மாணவர்களின் வாதங்களை விவாதிக்கவும் சவால் விடவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்ற அவர், பல்கலைக்கழக நிர்வாகங்களும் சம்பந்தப்பட்ட அமைச்சும் மாணவர்களின் அறிவுசார் கலாச்சாரத்தை மேம்படுத்த முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும் என்றார்.
மாணவர்களின் செயல்பாடுகளுக்குத் தடைகளை ஏற்படுத்தாமல் சுதந்திரமான சூழலை உருவாக்குவதன் மூலமே நாட்டின் கல்வி எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்றும் பிரதமர் மேலும் உறுதிப்படுத்தினார்.