Offline
Menu
மனைவி, குழந்தைகளைக் கொன்று கணவன் தற்கொலையா?
By Administrator
Published on 08/30/2026 12:00
News

கடந்த வியாழக்கிழமை கெப்போங், தேசா பார்க்சிட்டி (Desa ParkCity) காண்டோமினியத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், 9 வயது சிறுமி மற்றும் 7 வயது சிறுவன் ஆகிய இருவரும் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாட்சில் மர்சுஸ் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், நேற்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை இரண்டு குழந்தைகளுக்கும் பிரேதப் பரிசோதனை நடைபெற்றதாகக் குறிப்பிட்டார்.

இருவரின் கழுத்துப் பகுதியிலும் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட ஆழமான காயங்கள் இருந்தன.

47 வயது தாயின் உடற்கூறாய்வு நேற்று மதியம் 2 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெற்றது. இவர் கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மேலும் 48 வயது தந்தை (சந்தேக நபர்) குடும்பத்தைக் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படும் இவரின் பிரேதப் பரிசோதனை இன்று பிற்பகல் 2 மணிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று காலை கோலாலம்பூர் மருத்துவமனையின் தடயவியல் குழுவும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு மீண்டும் சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர். ‘லவ் ஸ்கேம்’ (Love Scam) காதல் மோசடி, சட்டவிரோத முதலீடு மற்றும் RM 260,000 கடன் ஆகியவை தொடர்பில் சம்பவ இடத்தில் சிக்கிய கடிதம் குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தந்தை தன்னிச்சையாகச் செயல்பட்டு மனைவி மற்றும் இரு குழந்தைகளைக் கொன்றுவிட்டு பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை தொடர்கிறது.

இக்குடும்பத்தினர் ‘லவ் ஸ்கேம்’ வலையில் சிக்கிப் பணத்தை இழந்தது அவர்களது உறவினர்களுக்கும் முன்பே தெரிந்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்று மாலை 6 மணிக்குத் தந்தையின் உடற்கூறாய்வு முடிவடைந்த பிறகே, நான்கு பேரின் உடல்களும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் எனப் போலீசார் தெரிவித்தனர்.

 

Comments