கெடாவின் குருன் பகுதியில் உள்ள ஜாலான் ஜெனியாங், மஸ்ஜித் பத்து 3 என்ற இடத்தில் நடந்த விபத்தில், அவன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் இரண்டு லோரிகளுக்கு இடையில் சிக்கியதில் 12 வயது சிறுவன் உயிரிழந்தான். பெண்டாங்கில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் முஹம்மது இல்ஹாம் ஃபிர்தாஸ் முகமது இருவான் என அந்தச் சிறுவன் அடையாளம் காணப்பட்டதாக கோலா மூடா காவல் துறை உதவி ஆணையர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.
வியாழக்கிழமை (செப்டம்பர் 3) மதியம் 2 மணிக்கு பதிவான இந்த விபத்து, போக்குவரத்து சிக்னல் சிவப்பு நிறமாக மாறிய பிறகு ஒரு கார் திடீரென பிரேக் போட்டதால் நிகழ்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காருக்கு பின்னால் வந்த லோரி திடீரென பிரேக் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், அதன் பின்பகுதி சறுக்கி மோட்டார் சைக்கிளை நசுக்கியது என்று ஆஸ்ட்ரோ அவானி செய்தியில் அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், அந்தச் சிறுவன் இரண்டு லாரிகளுக்கு இடையில் பின்பக்க டயருக்கு அருகே சிக்கிக்கொண்டதாகவும், பின்னால் அமர்ந்து பயணித்த அவனது 14 வயது நண்பன் சாலையில் தூக்கி வீசப்பட்டதாகவும் ஏசிபி ஹன்யான் கூறினார். விபத்தில் இறந்த சிறுவனுக்கு உடலிலும் இரு தொடைகளிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அதே நேரத்தில் பின்னால் அமர்ந்து பயணித்தவருக்கு கைகளிலும் கால்களிலும் காயங்கள் ஏற்பட்டன என்று அவர் கூறினார். பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சுங்கைப்பட்டானியில் உள்ள சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.