நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை தொடர்பு கொள்ள முடியாத மலேசியர்களில், 52 பேரின் உறவினர்களிடம் இருந்து மரபணு (DNA) மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள இயற்கை பேரிடரில் மொத்தம் 55 மலேசியர்களை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில், எஞ்சியுள்ள 3 மலேசியர்களின் குடும்பத்தாரிடமிருந்தும் டி.என்.ஏ மாதிரிகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து ‘Malaysian Solidarity: Families in Hope’ அமைப்பின் பிரதிநிதி டாக்டர் ஆர். மணிவண்ணன் கூறுகையில், “நேற்று வரை, மாயமான 55 மலேசியர்களில் 52 பேரின் உறவினர்களிடம் இருந்து டி.என்.ஏ மாதிரிகள் வெற்றிகரமாகப் பெறப்பட்டுள்ளன. இந்த வாரத்திற்குள் மாதிரி சேகரிப்பு முழுவதையும் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனவே தற்போதைய நிலையில் எந்தத் தாமதமும் இல்லை” என்றார்.
இருப்பினும், இந்த வார இறுதிக்குள் அனைத்து மாதிரிகளையும் சேகரித்து முடிக்க முடியுமா என்று கேட்கப்பட்டதற்கு, எஞ்சியுள்ள உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடிவதைப் பொறுத்தே அது அமையும் என அவர் விளக்கமளித்தார்.
நேபாளத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், மாயமான மலேசியர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளும், அடையாளப் பணி சாத்தியக்கூறுகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.