பெங்களூரு,கர்நாடக மாநிலம் பெங்களூருவின் புறநகர் பகுதியில் உள்ள சந்தபுரா ரெயில்வே பாலம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சூட்கேசை சோதனை செய்து பார்த்தபோது அதில் ஒரு பெண்ணின் சடலம் இருந்தது கண்டறியப்பட்டது.
அந்த பெண் வேறு ஒரு இடத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அவரது உடல் சூட்கேசில் அடைக்கப்பட்டு ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த பெண்ணின் சடலத்தை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
சூட்கேசில் வேறு ஆதாரங்கள் எதுவும் கிடைக்காத நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் யார்? அவரது வயது, ஊர் உள்ளிட்ட விவரங்கள் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்படி முதற்கட்டமாக காணாமல் போன பெண்கள் பற்றிய வழக்குகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.