சீனப் பிரஜை ஒருவரிடம் RM2 மில்லியன் வரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகப் பல்வேறு நிலைகளில் உள்ள 12 காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் குறித்த சீனப் பிரஜையிடம் RM2 மில்லியன் பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால், பாதிக்கப்பட்ட நபர் US$140,000 (தோராயமாக RM560,000) வழங்கிய பிறகே விடுவிக்கப்பட்டார்.
விடுவிக்கப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக டாங் வாங்கி (Dang Wangi) மாவட்டக் காவல் தலைமையகத்தில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் உள்ளக விசாரணை தொடங்கப்பட்டது என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் துணை கண்காணிப்பாளர் (DSP), உதவி கண்காணிப்பாளர் (ASP) மற்றும் கீழ்நிலை அதிகாரிகள் உட்பட மொத்தம் 12 பேர் அடங்குவர்.
இந்நிலையில் விசாரணையின் போது, மிரட்டிப் பறிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை புலனாய்வு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
டாங் வாங்கி மாவட்டக் காவல் தலைவர் உதவி ஆணையர் சாசாலி ஆடம் கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.