Offline
Menu

LATEST NEWS

70,000-க்கும் அதிகமான எக்ஸ்டசி மாத்திரைகளைக் கடத்த முயற்சி
By Administrator
Published on 08/01/2026 15:00
News

இந்தோனேசிய விமான நிலையத்தில் மலேசிய விமானி கைது!

சர்வதேச விமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் மலேசிய விமானி ஒருவர், சுமார் 25 கிலோ எடையுள்ள 70,000-க்கும் அதிகமான எக்ஸ்டசி (Ecstasy) போதை மாத்திரைகளை இந்தோனேசியாவிற்குள் கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11:30 மணியளவில், ஜகார்த்தாவில் உள்ள ‘சூகர்னோ-ஹட்டா’ (Soekarno-Hatta) சர்வதேச விமான நிலையத்தின் 3-ஆம் முனையத்தில் வைத்து இந்தோனேசிய அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்களான Kompas.com மற்றும் Suara.com செய்தி வெளியிட்டுள்ளன.

விமான நிலையத்தின் எக்ஸ்-ரே (X-ray) பரிசோதனையின் போது சந்தேகத்திற்கிடமாக இருந்த அவரது பெட்டியைச் சோதனையிட்டதில், 14 பெரிய பொட்டலங்களில் அடைக்கப்பட்ட 70,000 எக்ஸ்டசி மாத்திரைகள், 2.74 கிராம் மெத்தாம்பெட்டமைன் (Methamphetamine) மற்றும் எரிக்கப்பட்ட போதைப்பொருள் எஞ்சியிருந்த கண்ணாடியிலான குழாய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அவரது மலேசிய கடவுச்சீட்டு, அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கைபேசி மற்றும் விமான நிறுவனத்தின் சீருடை ஆகியவை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

ஜகார்த்தாவிற்குப் போதைப்பொருட்களைக் கடத்திச் செல்வதற்காக மலேசியாவைச் சேர்ந்த நபர் ஒருவரால் தனக்கு RM50,000 சன்மானம் பேசப்பட்டதாக அந்த விமானி ஒப்புக்கொண்டுள்ளார்.

இவர் ஏற்கனவே இருமுறை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். மலேசியாவில் உள்ள சபா பகுதிக்கு மெத்தாம்பெட்டமைன் கடத்தியது மற்றும் ஜகார்த்தாவிற்கு 7 கிலோ மெத்தாம்பெட்டமைன் கடத்தியது மற்றும் தற்போது 3-ஆவது முறையாக தற்போது எக்ஸ்டசி மாத்திரைகளைக் கடத்த முயன்றபோது விமான நிலையத்தில் சிக்கியுள்ளார்.

அவருக்கு நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், அவர் ‘மெத்தாம்பெட்டமைன்’, ‘MDMA’ மற்றும் ‘கோகோயின்’ ஆகிய ஆபத்தான போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அந்த மலேசிய விமானி மேலதிக விசாரணைகளுக்காக இந்தோனேசியக் காவல் துறையின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Comments