Offline
Menu
நெகிரி செம்பிலானின் 12-ஆவது மந்திரி பெசாராக டத்தோ இஸ்மாயில் லாசிம் பதவி ஏற்றார்!
By Administrator
Published on 08/03/2026 16:00
News

ஜுவாசே தொகுதி சட்டமன்ற உறுப்பினரான டத்தோ இஸ்மாயில் லாசிம் (வயது 67), நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 12-ஆவது மந்திரி பெசாராக இன்று பதவி ஏற்றார்.

ஸ்ரீ மெனாந்தி அரண்மனையில் இன்று காலை 11:29 மணியளவில் நடைபெற்ற அரச முறைச் சடங்கில், நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் முன்னிலையில் அவர் பதவி ஏற்றுக் கொண்டதுடன் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் மாநில அரச குடும்பத்தினர், சுங்கை உஜோங் மற்றும் ரெம்பாவ் பகுதியின் ‘உண்டாங் லாக்’ தலைவர்கள், பாரிசான் நேஷனல் கூட்டணியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் மற்றும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நேற்று நடந்து முடிந்த 16-ஆவது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், பாரிசான் நேஷனல் (BN) சார்பில் போட்டியிட்ட இஸ்மாயில் லாசிம், ஜுவாசே தொகுதியில் 4,323 வாக்குகள் பெரும்பான்மையில் பெர்சத்து மற்றும் பகாத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை வீழ்த்தி மீண்டும் வெற்றி பெற்றார்.

மொத்தம் உள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளில் பாரிசான் நேஷனல் 18 தொகுதிகளையும், பெரிக்காத்தான் நேஷனல் (PN) 7 தொகுதிகளையும் கைப்பற்றின. இவ்விரு கூட்டணிகளும் இணைந்து 25 தொகுதிகளின் பெரும்பான்மையுடன் புதிய மாநில அரசாங்கத்தை அமைத்துள்ளன.

Comments